ஈரோடு, ஏப். 1: ஈரோடு ராஜாஜிபுரம் மக்களின் மேம்பாட்டிற்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று ஈரோடு கிழக்கு தொகுதி காங். வேட்பாளர் திருமகன் ஈவெரா உறுதியளித்துள்ளார். திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா நேற்று ஈரோட்டில் திருநகர் காலனி, காந்திபுரம், ராஜாஜிபுரம், குப்பக்காடு, செல்லபாட்ஷா வீதி, ஜின்னா வீதி, கோவலன் வீதி, ஈவிகே சம்பத் சாலை, சத்தி ரோடு உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் திருமகன் ஈவெரா பேசியதாவது: கருங்கல்பாளையம் காவிரி சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல், ஈரோட்டை இணைக்கும் இந்த சாலையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்டி காவிரி பாலத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காந்திரபுரம், ராஜாஜிபுரம் ஆகிய பகுதிகளில் வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அதிக அளவில் உள்ளனர்.
இப்பகுதியில் அடிப்படை வசதிகள் என்பது மிகவும் குறைவாக உள்ளது. பொதுக்கழிப்பிட வசதிகள்கூட போதுமான அளவில் செய்து கொடுக்கப்படாமல் உள்ளதால், திறந்த வெளிப்பகுதிகளை கழிப்பிடங்களாக பயன்படுத்தும் அவலநிலை தொடர்ந்து கொண்டுள்ளது. எனவே, இப்பகுதியை மேம்படுத்தும் வகையில் சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். குறிப்பாக பழுதடைந்துள்ள வீடுகள் அனைத்தும் அரசின் சார்பில் மானியத்துடன் கட்டிக்கொடுக்கப்படும். காலனி தொழில் பயிற்சி கூடம் அமைக்கப்படும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஆர்கேவி சாலையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பழுதடைந்துள்ள சாலைகள் அனைத்தும் முழுமையாக செப்பனிடப்படும். இவ்வாறு திருமகன் ஈவெரா பேசினார்.